மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சு.திருநாவுக்கரசர் பேசியது:-
காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். இதைச் சொல்ல வேண்டிய அவசியம் காங்கிரஸýக்கு இல்லை. இந்திரா காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறியா காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது? அதைப்போலத்தான் ராகுல் காந்தியையும் அறிவிக்க வேண்டியதில்லை.
ஆனால், பாஜகவுக்கு மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. மோடி என்று கூறாவிட்டால், பிரதமர் பதவிக்கு அமித் ஷா, ராஜ்நாத் சிங் என்று போட்டி ஏற்படும். அதனால் மோடியை அறிவித்து தேர்தலைச் சந்தித்தனர்.
மக்களவைத் தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக அரசு காப்பாற்றவில்லை. பாஜகவின் இந்த நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். பாஜக ஆட்சியை அகற்றுவதற்குத் தயாராகி வருகிறார்கள். தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை. அதிமுகவைத்தான் அவர்கள் மிரட்டி கூட்டணி வைக்கப் பார்க்கிறார்கள்.
ரஜினி கட்சி தொடங்குவாரா என்பதே சந்தேகம். மக்களவைக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் அவர் கட்சி ஆரம்பிக்கமாட்டார். அதனால், அவரும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.
காங்கிரஸýடன் கூட்டணி அமைக்கத்தான் அனைத்து கட்சிகளும் தயாராக இருக்கின்றன. மத்தியில் காங்கிரஸýடன் இடதுசாரிகள் தற்போது கூட்டணி அமைக்காவிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு பாஜகவை அவர்கள் நிச்சயம் ஆதரிக்க மாட்டார்கள். அதனால், இடதுசாரிகளின் ஆதரவும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸýக்குத்தான் கிடைக்கும்.
ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. இந்திராகாந்தி வழியில் மதச்சார்பாற்ற ஆட்சியை காங்கிரஸ் அளிக்கும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, செல்லம்மாள் கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் விமலா அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.