முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகிறது.
பருவநிலை மாறும் காலங்களில் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக் குழு மற்றும் துணைக் குழு ஆகிய இரண்டு குழுக்கள் ஆய்வு நடத்தும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு (சப்-கமிட்டி) தலைவர் ராஜேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், துணைக் கோட்ட பொறியாளர் சாம் இர்வின், கேரள அரசு தரப்பில் நீர்ப் பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொள்கின்றனர்.
பிரதான அணை, பேபி அணை, நீர்வழி போக்கிகள், அணையின் நீர் கசியும் பகுதி உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து மத்திய கமிட்டியிடம் அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்.
அணை நிலவரம்: திங்கள்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.60 அடியாக இருந்தது (முழு கொள்ளளவு (152). நீர் இருப்பு 4,396 மில்லியன் கன அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 721 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 450 கன அடி.