தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருள்கள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது அவர் அளித்த பேட்டி:
வானிலை ஆய்வு மையம் வழங்கிய தகவலின் அடிப்படையில் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால், சிலர் விதிமுறையை மீறி கடலுக்குச் சென்றுள்ளனர்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் 29 வீடுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
அந்த வீடுகளை மற்ற பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம், ராக் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் 95 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து தாமிர தாது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இன்னும் ஒரு மாத காலத்தில் முழுமையாக அகற்றப்படும்.
இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தமிழக அரசு மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார் அவர்.