சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரையில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய் இரவில் இருந்து விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.
புதன்கிழமை காலையில் இருந்தும் சென்னை, காஞ்சிபுரத்தில் அநேக பகுதிகளில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையமும் அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை தொடரும்; மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்துக்குக் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.