கஜா புயலால் சேதமடைந்த பழம்பெரும் வரலாற்றுச் சின்னமான சித்தன்னவாசல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள வரலாற்று புகழ்பெற்ற சித்தன்னவாசல் கடந்த நவ. 16 ஆம் தேதி அதிகாலை வீசிய கஜா புயலால் தனது அடையாளத்தை இழந்து காணப்படுகிறது.
கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. அன்னவாசல்இலுப்பூர்விராலிமலை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேருடன் பெயர்ந்து சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகள், கடைகளில் இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
புதுகை மாவட்டத்தில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தளம் உள்ளது. இங்குள்ள குகை ஓவியங்கள் 7 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 600 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திர வர்மனால் வரையப்பட்ட ஓவியங்கள் என்று கூறப்படுகிறது. இங்குள்ள கோயில்கள், செங்கல், மரம், மண், உலோகம் உள்ளிட்டவைகளால் கட்டப்பட்டுள்ளன. மலை மேல் 7 சமணர் படுக்கை உள்ளது இதன்தனிச் சிறப்பாகும்.
பல்வேறு புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலாத் தலம், கடந்த நவ. 16 ம் தேதி வீசிய கஜா புயலால் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகள் சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் தற்போது சித்தன்னவாசல் சுற்றுலா தளம் காலவரையற்ற நிலையில் மூடப்பட்டுள்ளது. பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் சித்தன்னவாசல் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.