கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த நவ.15-ஆம் தேதி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த கஜா புயலால் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதனால் அப்பகுதியில் உணவு, உடை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு ஏராளமான தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகின்றனர். இதனிடையே முதல்வரின் உத்தரவின்படி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான பொருள்களை தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்ல உரிய உதவிகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.