சிலைக்கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து; பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழகஅரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு..
சிலைக்கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து; பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு 

சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழகஅரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். 

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 22-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த நீதிமன்றம் ஒரு தனிபிரிவை அமைத்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அவசரகதியில் சிபிஐ விசாரணை நடத்த அரசாணை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் எனத் தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.  இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேல் வெள்ளியன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், உயர் நீதிமன்றம்,  இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை மதியம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கானது வெள்ளி மதியம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். அத்துடன் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தாங்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், அவசரகதியில் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்..

சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com