கமல்ஹாசனை விமர்சிக்கவே அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆவின் பாலக மட்டுமல்லாமல் ஆவின் இனிப்பகத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா முறையாக வழங்கப்படுகிறது. முறையாக பணப்பட்டுவாடா நடப்பதால்தான் விவசாயிகள் அதிகளவு பாலை ஆவினுக்கு கொடுக்க முன்வருகின்றனர்.
தரமான பொருள் என்பதால்தான் வெளிநாட்டில் ஆவின் பால் விற்பனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தெய்வத்தின் குழந்தைகள், அவர்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை.
ஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனை விமர்சிக்க அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தினேன். மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.