இலங்கையில் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகு 28 ஆயிரம் தமிழர்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வழிபட்ட பின்னர், செய்தியாளர்களுக்கு இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் அளித்த பேட்டி: இலங்கைத் தமிழர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்ட போரின்போது ராணுவத்தால் ஏராளமான பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
இந்தப் பகுதிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படும். அந்தப் பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது.
டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகு 28 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தர இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்னை குறித்து இலங்கை, இந்திய நாடுகளின் பிரதமர்கள் சேர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.