சேலம்: அ.தி.மு.க.வில் வாரிசு இல்லை; தொண்டர்களே அதன் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா சேலம் அருகேயுள்ள பூலாவரி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தொண்டர்கள் இருக்கும் இயக்கமே எப்போதும் வலிமையான இயக்கம். அ.தி.மு.க.வில் வாரிசு என்பதே இல்லை. தொண்டர்களே அதன் வாரிசு. அ.தி.மு.க. இளைஞர்கள் இருக்கும் ஓர் இயக்கம்.
எதிர்க்கட்சிகள் என்னதான் நம்மை விரட்டினாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை. தி.மு.க. ஆள் வைத்து உழைக்கிற கட்சி. ஆனால் அ.தி.மு.க. எப்போதும் சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி. தி.மு.க. தலைவராக மறைந்த கருணாநிதி இருந்தபொழுதே அ.தி.மு.க. ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களை ஏமாற்றும் கட்சிகள் இனி ஆட்சிக்கு வர முடியாது
இந்திய துணை கண்டத்திலேயே பொதுமக்கள் நலுனுக்காக அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசுதான். அவர்தான் மாணவ மாணவிகள் பயன்பெற மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார். அந்த திட்டத்தில் இதுவரை 36 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.