அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக.. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.. விஜயபாஸ்கருக்கு வலுக்கும் நெருக்கடி

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை ஆதாரங்களுடன் புகார் அளித்ததையடுத்து, "அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவரை பதவியில் இருந்து நீக்குக" என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். 
அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக.. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.. விஜயபாஸ்கருக்கு வலுக்கும் நெருக்கடி

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை ஆதாரங்களுடன் புகார் அளித்ததையடுத்து, "அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவரை பதவியில் இருந்து நீக்குக" என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக் குவித்தது குறித்தும், இயற்கை வளக் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை புகார் அளித்தும் அப்புகார்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்ற முதல்வர் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து தமிழக அரசுக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதிய வருமானவரித் துறை, அவற்றின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 

அக்கடிதத்தின் நகலையும், அக்கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களையும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

வருமானவரித்துறை கடிதம்:

'புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இல்லத்தில் நடத்தப்பட்ட மொத்தம் ரூ.20 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.12.96 லட்சம் பழுப்பு நிற உறைகளில் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் கடிதம், செவிலியர் இடமாற்ற ஆணை ஆகியவற்றுடன் வைக்கப்பட்டிருந்தாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. 

உறைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் கையூட்டாக பெறப்பட்டதாக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி  ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதவிர, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட 9 பக்க வரவு-செலவு  ஆவணத்தில் சுகாதாரத்துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்காக 2016-ஆம் ஆண்டு ஜுலை முதல் நவம்பர் வரையிலான ஆகிய 5 மாதங்களில் மட்டும் கையூட்டாக ரூ.20.76 கோடி வசூல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்' அந்தக் கடிதத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் விதிகளை மீறி 72 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை விட 850% கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இந்தக் கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும்  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குட்கா ஆலைகளில் வருமானவரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதுகுறித்து, தமிழக அரசு வருமான வரித்துறை எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், அது குறித்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. 

விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு  ரூ.89 கோடி அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 

இதுகுறித்து  காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த போதிலும்  அதன் மீது எந்த மேல்நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்த பிறகும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட அந்த அமைப்பை  பினாமி அரசு ஏற்படுத்தவில்லை. அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் உள்ளே செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவே லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த பினாமி அரசு தயங்குகிறது. இதை அனுமதிக்க முடியாது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்." என்றார். 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தமிழக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் மற்றும் முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வந்து கொண்டுள்ளன. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் கூட இக்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பவில்லை. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் சில வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. குட்கா ஊழல் வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை அளித்துள்ளதுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

இதன்படி சுகாதாரத் துறையில் பணி மாறுதலுக்கு கையூட்டு பெற்றது, மருத்துவக் கல்லூரிகளில் பணி நியமனம், பாடப் பிரிவுகளுக்கு அனுமதியளித்தல் போன்றவைகளுக்கு லஞ்சம் பெற்றது என்பதோடு விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான கிரானைட் வெட்டி விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது  நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ. 89 கோடி பணம் தேர்தலுக்காக பட்டுவாடா செய்யப்பட்ட விபரம் இவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. ஆனால் இவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் மீது அதிகரித்து வரும் ஊழல் புகார்கள் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைப்பதுடன் ஒட்டுமொத்த சமூக சீரழிவுக்கு வழி வகுத்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கையினால் மிக மோசமாக தமிழக மக்கள் பாதித்து வருகின்றனர். மருத்துவத் துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மக்களது உடல் நலத்திற்கும், உயிருக்கும் ஆபத்தான விளைவுகளை உண்டாக்குவதாகும்.

எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வந்துள்ள புகார்களை புறந்தள்ளாமல் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டுமெனவும், இவ்விசாரணை நேர்மையானதாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com