சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழுமையான அளவில் உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் வெள்ளிக்கிழமைஎன்று அனுமதிக்கப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து சமூக தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நிலை பற்றி வரும் தகவல்கள் குறித்து அவரது மகன் விடியோ மூலம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பின்னர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, பரிசோதனைகள் செய்யப்பட்டு விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழுமையான அளவில் உடல்நலன் பெற்று,பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.