மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப். 21) நடைபெறவிருந்த அரசு மருத்துவர்களின் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 21) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பான பேச்சுவார்த்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் டாக்டர் கே. செந்தில், துணைத் தலைவர்கள் மருத்துவர்கள் லட்சுமிநாராயணன், ஞானப்பிரகாசம், சுந்தரேசன் ஆகியோர்கலந்துகொண்டனர்.
அரசு மருத்துவர்களின் கோரிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை (செப். 21) நடைபெறவிருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அரசின் நடவடிக்கையைப் பொருத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.