அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குட்கா முறைகேட்டில் தொடர்புடைய அமைச்சரையும், காவல்துறை அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சென்னை கந்தன்சாவடியில் பொருளாளர் துரைமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், தாயகம் கவி உள்பட பலர் பங்கேற்றனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனத்தில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலும், திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.