சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த சிறந்த விளம்பரப் படங்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக சுற்றுச்சுழல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அ.உதயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலம், காற்று, நீர், வனம், தாவரங்கள், விலங்குகள் பாதுகாப்பு, தொழிற்சாலை நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் பொது ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்கு ஏதுவாக விளம்பரப் படங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரூ. 7 லட்சம்: இதில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் விளம்பரப் படத்துக்கு ரூ. 7 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 6 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் படங்கள் குறுந்தகடு அல்லது பென்டிரைவ் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரிக்கு டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 004-24336421 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது tndoe@tn.nic.in, www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.