ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை ரூ.35 கோடியில் புதிதாக அமைக்க உள்ளதாக ரயில் விகாஸ் நிகம் பொதுமேலாளர் மகேந்திர பூபதி சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு கடலுக்கு மேல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ரயில்வே துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சேதமடைந்த இரும்பு கார்டர்கள் மற்றும் தண்டவாளங்கள் அனைத்தும் மாற்றும் பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் பாலத்தில் கப்பல்கள் இப்பகுதியை கடக்கும் போது திறந்து வழிவிடும் வகையில், மையப்பகுதியில் 200 மீட்டர் நீளத்தில் உள்ள தூக்குப்பாலமும் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனை மாற்ற இந்திய ரயில்வே துறை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே விகாஸ் நிகம் லிமிடெட் பொதுமேலாளர் மகேந்திர பூபதி சிங் செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை ரூ. 35 கோடியில் மாற்றி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் இரண்டு மாதங்கள் நடைபெறும். புதிய பாலம் வேறு இடத்தில் வடிவமைக்கபட்டு, தயாரானதும் இங்கு கொண்டுவரப்படும். அதன்பின் பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலத்தைப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது ஓய்வு பெற்ற பொறியாளர் அன்பழகன், மதுரை கோட்ஸ் பொறியாளர் மனோகரன் மற்றும் ரயில்வேத்துறையினர் உடனிருந்தனர்.