மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக 1,800 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதன்கிழமை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கிராமப்புற சுகாதார சேவையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 1,800 மருத்துவர்கள், 480 கிராம சுகாதார செவிலியர்கள் இன்னும் 2 மாதத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். நிகழாண்டில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 262 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தில் வேப்பூர், சூளகிரி, விராலிமலை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்கள் பணியாற்றும் திட்டம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
நிகழ்ச்சியில், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.