நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் விரும்பாத பொருள்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சென்னை அண்ணாநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது விநியோக திட்டக் கிடங்கில் அவர் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
கிடங்குகளில் தானிய சேமிப்பு இழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கி இழுவை இயந்திரம், சிசிடிவி கண்காணிப்பு கேமரா, லாரிகளில் ஜிபிஎஸ். கருவி பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பாத பொருள்களை வாங்கச் சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றார் அமைச்சர் காமராஜ்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ. மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.