திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த மேலும் 16 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டையில் கடந்த 13, 14ஆம் தேதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல்வீச்சு, கலவரம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். கடைகளுக்குத் தீவைப்பு, வாகனங்கள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 6 வழக்குகள் பதியப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, போலீஸாரால் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் 4 வழக்குகள் பதியப்பட்டன. இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த மேலும் 16 பேரை செங்கோட்டை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. கல்வீச்சு, கலவரம் தொடர்பாக இதுவரை 10 வழக்குகள் பதியப்பட்டு, 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.