வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு: மீனவர்களுக்குஎச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக மீனவர்கள் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் (செப். 20, 21) கடலுக்குச் செல்ல வேண்டாம்


கிழக்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக மீனவர்கள் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் (செப். 20, 21) கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இதனால், தெற்கு, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை மாலை 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், வியாழக்கிழமை 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, தமிழக மீனவர்கள் அந்தமான், தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வியாழக்கிழமையும், ஆந்திரம், மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு வியாழன் வெள்ளிக்கிழமைகளிலும் (செப். 20, 21) கடலுக்குச் செல்ல வேண்டாம்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகர், புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் பாலச்சந்திரன்.
பள்ளிப்பட்டில் 50 மி.மீ.மழை: புதன்கிழமை காலை 8.30 மணி வரையலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம், மகாபலிபுரத்தில் தலா 50 மி.மீ.மழையும், ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், விழுப்புரம், புதுச்சேரியில் தலா 40 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com