காற்றாலை மின்சார முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் தங்கமணிக்கு, மு.க.ஸ்டாலின் ஒரு வாரம் கெடு விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். இப்போதாவது அமைச்சர் தங்கமணி சொன்ன மாதிரி என் மீது உடனடியாக வழக்கு போட வேண்டும்.
இவ்விவகாரத்தில் ஒரு வாரம் பொறுப்பேன். அந்த ஒரு வார காலத்திற்குள் அவர் என் மீது வழக்கு போடவில்லை என்று சொன்னால் எப்படி குட்கா பிரச்னையை சிபிஐ வரை கொண்டு சென்று விசாரணை நடைபெறுகிறதோ அதைபோல் இதையும் கொண்டு செல்வோம். என் மீது வழக்கு போடுவேன் என சொன்ன தங்கமணி வழக்குப் போடத் தயாரா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காற்றாலை மின்உற்பத்தியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் நேற்று முறைகேடு தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டு சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.