மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை நிறுவனம் ஒன்று கடந்த அக்டோபரில் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. அதை லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது உரிய அனுமதிச் சீட்டு இல்லாததால் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, மணலை விற்பனை செய்ய தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மணலை டன் ஒன்றுக்கு ரூ. 2,050-க்கு தமிழக அரசு வாங்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த மணலை பொதுப்பணித் துறை மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கியது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் WWW.TNSAND.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மலேசிய மணலில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது என்றும், முன்னுரிமை அடிப்படையில் முன்பதிவு செய்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு யூனிட் அளவு (ஏறத்தாழ 4.5 மெட்ரிக் டன்) மணலின் விலை ரூ.9 ஆயிரத்து 990 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு யூனிட் ரூ.19 ஆயிரத்து 980 என்றும், 3 யூனிட் ரூ.29 ஆயிரத்து 970 என்றும், 4 யூனிட் ரூ.39 ஆயிரத்து 960 என்றும், 5 யூனிட் ரூ.49 ஆயிரத்து 950 என்றும் விலைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNSAND என்ற செல்லிடப்பேசி செயலி வழியாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.