வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 23-ஆம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கரை கடந்த தயே புயல்: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியது. தயே' என்று பெயர்கொண்ட இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து, தெற்கு ஒடிஸா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திரம் கடற்கரை கோபால்பூருக்கு அருகில் வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்தது. அதைத்தொடர்ந்து புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு உள் ஒடிஸாவில் வெள்ளிக்கிழமை மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதையடுத்து மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்துக்கு வடக்கு ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.