தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னல் காணப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ராஜபாளையத்தில் 110 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தலா 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 90 மி.மீ., தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 80 மி.மீ., மதுரை மாவட்டம் பேரையூர், நீலகிரி மாவட்டம் குன்னூர், குந்தாபாலத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், மதுரை மாவட்டம் சோழவந்தான், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.