வரும் அக்.4-ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலமான அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை (செப். 27) தொடங்குகிறது.
நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் நாளில் குரு பெயர்ச்சி விழா வழிபாடு நடத்தப்படுகிறது.
அதன்படி, குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு 4.10.2018 அன்று பிரவேசம் செய்வதையொட்டி, அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை தொடங்கி அக்.1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை, குருபெயர்ச்சிக்கு பின்னர் அக்.8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, கோயில் நிர்வாகம் தெரிவித்தது:
இந்த லட்சார்ச்சனையில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.
லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் அதற்கான கட்டணம் ரூ.400-ஐ பணவிடை அல்லது வரைவோலை எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. டிமாண்ட் டிராப்ட் எடுப்போர் உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கியில் (திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கிளை) மாற்றத்தக்க வகையிலோ எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேசுவர சுவாமி திருக்கோயில், (குரு பரிகார ஸ்தலம்) ஆலங்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் -612801 என்ற முகவரிக்கு எடுத்து அனுப்பலாம்.
குருபெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ச.கிருஷ்ணன், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பி.தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.