முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லாதது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தேனி பங்களாமேடு திடலில், அதிமுக சார்பில் ஈழப் படுகொலைக்கு காரணமான திமுக-காங்கிரஸ் கட்சிகளை போர்க் குற்ற விசாரணைக்கு உள்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி, கண்டனப் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கூறினோம். ஆனால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஜெயலலிதா குணமாகிவிட்டால் போதும். அப்படி இல்லாமல் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் ஒரு அதிமுக தொண்டர் கூட ரோட்டில் நடந்து போக முடியாது. அடித்தேக் கொன்றுவிடுவார்கள் என்று கூட சொன்னேன். பயமுறுத்தினாலாவது வெளிநாடு அழைத்துச் செல்ல அனுமதிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? ஜெயலலிதாவை குணமாக்கிவிடுவோம் என்று அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இப்படிச் சொல்லியே வெளிநாடு அழைத்துச் செல்வதை தடுத்து விட்டார்கள் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.