ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றம் சார்பில் அனைத்துலகச் சிலப்பதிகார ஆய்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இன்றைய நவீன யுக இளந்தலைமுறையினரிடம் எடுத்துக்காட்டும் வகையில் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரத்தில் சிலப்பதிகார விழா இரு நாள்கள் நடைபெற்றது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையும், சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் சிலப்பதிகாரம் காட்டும் 1,800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் வரலாற்றை விளக்கும் வகையில் கலந்துரையாடல், கருத்தரங்கம் மற்றும் இசை - நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவுக்கு சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத் தலைவர் மகேந்திரன் ரத்னம் தலைமை வகித்தார்.
இதில், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுக் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினார்.
மேலும், ஏற்கெனவே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையும், சிட்னி தமிழ் இலக்கியக்கலை மன்றமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முத்தமிழ்க் காப்பியத்தை வழங்கிய இளங்கோவடிகளுக்கு சிட்னியில் சிலை நிறுவவும், ஜூலை மாதத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அனைத்துலகச் சிலப்பதிகார ஆய்வு மாநாடு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு மூன்று நாள்களுக்கு நடத்தப்படவுள்ள சிலப்பதிகார ஆய்வு மாநாட்டில் உலகெங்குமிருந்து தமிழ் மற்றும் பிற துறைச் சார்ந்த பன்மொழி அறிஞர்களை அழைப்பது என்றும், இளங்கோவடிகளின் 6 அடி உருவச் சிலையைத் தஞ்சாவூரிலுள்ள தமிழ்த்தாய் அறக்கட்டளை வழங்கவுள்ளது எனவும் குறிஞ்சிவேந்தனும், மகேந்திரன் ரத்னமும் கூட்டாக அறிவித்தனர்.
விழாவில் எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, அன்புஜெயா, ஆஸ்திரேலியக் கவிஞர் சோமசுந்தரபாரதி, உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலர் சிதம்பரபாரதி, சிட்னி அனகன்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.