கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ட்விட்டரில் அவதூறு பதிவு செய்ததாக நடிகை திவ்யா ஸ்பந்தனா மீது தமிழக பாஜக கோவை காவல்துறையில் புகார் செய்துள்ளது.
தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. தமிழில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக 'குத்து' மற்றும் நடிகர் தனுஷுடன் 'பொல்லாதவன்' ஆகிய படங்களில்நடித்துள்ளார். பின்னர் காங்கிரசில் இணைந்த அவர் அக்கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துளளர். தற்போது காங்கிரசின் சமூக வலைதள குழுவிற்கு பொறுப்பாளராக இருக்கிறார்.
சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக திவ்யா சில கருத்துகளை பதிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், கோமதிநகர் காவல் நிலையத்தில் வழக்குரைஞர் சையது ரிஸ்வான் அகமது என்பவர் புகார் அளித்தார். அதில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகவும், வெறுப்புணர்வை பரப்பும் வகையில் திவ்யா ஸ்பந்தனா திவுகளை வெளியிட்டுள்ளார்; எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் பேரில், திவ்யா ஸ்பந்தனா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், இந்திய தண்டனையியல் சட்டத்தின் தேசத் துரோக பிரிவு ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் கோமதிநகர் காவல்நிலைய போலீஸார் புதனன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ட்விட்டரில் அவதூறு பதிவு செய்ததாக நடிகை திவ்யா ஸ்பந்தனா மீது தமிழக பாஜக கோவை காவல்துறையில் புகார் செய்துள்ளது.
புதனன்று அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருந்தார். அதில் புகார் கொடுத்தவரை கிண்டல் செய்யும் தொனியில் கருத்துக் கூறியிருந்ததுடன், இந்தியாவில் இருந்து தேசத் துரோக சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.
எனவே இதுதொடர்பாக நடிகை திவ்யா ஸ்பந்தனாவை கைதுசெய்ய வேண்டும் என்று கோரி தமிழக பாஜக பொறுப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.சேகர் கோவை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அவர் தனது புகாரில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.