விருதுநகர் விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் இருந்த காலி நாற்காலிகளை படமெடுத்த புகைப்படக்காரர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரித் தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகரில் சனிக்கிழமையன்று காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் கணிசமான அளவு காலியாகக் கிடந்துள்ளன.
இதனை வார இதழின் புகைப்படக்காரர் ஒருவர்படம் பிடித்துள்ளார். அதனைக் கவனித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ஆத்திரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவர் உதவி கேட்டு குரல் எழுப்பினார். இதனால் சக பத்திரிகையாளர்கள் அவர் உதவிக்கு வந்தனர். பின்னர் மற்ற தொண்டர்கள் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து அங்கிருந்து இழுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குறிப்பிட்ட தொண்டர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.