சென்னை: பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்ய வேண்டிய காரியம் எது என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படமான 'தர்பார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாயன்று வெளியானது. அதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் வாயிலில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார் அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் நன்றாக வந்திருப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர்.
மக்களைவைத் தேர்தல் தொடர்பான என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இதுதொடர்பாக ஊடகங்கள் ஏதாவது கேள்வி கேட்டு அதனை பெரிதாக எழுதி எனக்கும் கமலுக்கும் இடையே உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்
நதிகளை இணைப்பதற்காக தனி ஆணையம் அமைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி வரவேற்கத்தக்கது.
நதிகளை இணைத்துவிட்டால் நாட்டில் உள்ள பாதி பிரச்னைகள் குறைந்துவிடும். இதை நான் முன்பே வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போதும் தெரிவித்திருந்தேன். இப்போதும் அதனை ஆதரிக்கிறேன்.
இந்த தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இறைவன் அருளால், மக்கள் ஆதரவால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பைத்தான் அவர்கள் முதலில் செயல் படுத்த வேண்டும்.
இது தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.