பெங்களூரு: அங்கிள், அவ்வப்போது கேமராவிலிருந்து கண்ணை எடுங்கள் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் அம்பை மாற்றிப் பிடித்த பிரதமர் மோடியை, நடிகை திவ்யா ஸ்பந்தனா கிண்டல் செய்துள்ளார்.
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் சனிக்கிழமையன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவருக்கு வில்-அம்பு பரிசாக வழங்கப்பட்டது. அதனைக் கையில் வைத்தவாறு பிரதமர் மோடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.அப்போது அவர் அம்பு தனக்கு குறி வைப்பது போல மாற்றிப் பிடித்திருந்தார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அதைக் கிண்டல் செய்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கிள், அவ்வப்போது கேமராவிலிருந்து கண்ணை எடுங்கள் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் அம்பை மாற்றி பிடித்த பிரதமர் மோடியை, நடிகை திவ்யா ஸ்பந்தனா கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
அங்கிள் ஜி, எது முக்கியமானது என்பதில் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது கேமராவிலிருந்து கண்ணை எடுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள் சரியா?. கேமரா உங்களுடைய நண்பன் கிடையாது. கேமராவுடனான உறவு முறிந்து விட்டது. கடவுள் ராமரும் சந்தோஷப்பட மாட்டார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.