மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக, சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதிகளும் அடங்கும்.
மேலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன் காரணமாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், தேர்தல் காரணமாக வியாழக்கிழமை பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
இங்குள்ள முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா உள்ளிட்டப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேர்தல் காரணமாக சன்னதி தெரு, பார்க் வியூ பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.