மக்களவைத் தேர்தல் நடைமுறைத் தொடங்கி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது 17வது மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடந்து முடிந்த வாக்குப்பதிவில் தமிழகம் முழுவதும் 38 தொகுதிகளில் 71.90% வாக்குகள் பதிவாகியிருந்தன.
தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களிடையே பல்வேறு முறைகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எனினும், கோடை வெயில், விடுமுறை நாள், வேறு ஊர்களில் பணி போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் 30 சதவீத மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாமல் இருந்துவிட்டனர்.
இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக வாக்குப் பதிவானது எப்போது தெரியுமா? 1967ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தான். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் 76.56% வாக்குகள் பதிவானது. அப்போது காங்கிரஸ் கையில் இருந்த ஆட்சி அதிகாரத்தை திமுக கைப்பற்றியது. இதுதான் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு. அதன்பிறகு அந்த சாதனை முறியடிக்கப்படவே இல்லை.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கூட 73.74% வாக்குகள் தான் பதிவானது. 2009ம் ஆண்டு 73.02 வாக்குகள் பதிவாகியிருந்தது. சொல்லப்போனால் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலை விடவும் இந்த ஆண்டு வாக்குப்பதிவு குறைந்திருப்பதுதான் உண்மை நிலவரம்.
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை எடுத்துக் கொண்டால் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.12% வாக்குகள் பதிவாகின.
நடந்து முடிந்த தேர்தல் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஆண் வாக்காளர்களை விடவும், பெண் வாக்காளர்களே இந்த ஆண்டு அதிகளவில் வாக்களித்துள்ளனர். அதாவது 2,12,96,722 பெண்கள் வாக்களித்துள்ளனர். அதே சமயம் 2,07,27,179 ஆண்களும், 1,066 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களித்துள்ளனர்.
38 மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் 26 தொகுதிகளில் 75%ம் மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறிப்பாக 10 தொகுதிகளில் 77 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக தென்சென்னையில்தான் 56.34 சதீவீத வாக்குகள் பதிவாகின.
அதே சமயம் 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 75.56% வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.