தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை புள்ளி விவர புலி, புள்ளி ராஜா என்று தான் பலரும் அழைப்பார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவையாக தெரிவித்தார்.
தேனியில் தனியார் பள்ளி நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்களிலேயே இவர் தான் சிறந்த அமைச்சர் என்று மாஃபா பாண்டியராஜனை பாராட்டினார்.
அப்போது அவர் மேலும் பேசுகையில்,
"தமிழ் வளர்ச்சித் துறையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக மக்களுக்கும் நாட்டுக்கும் பிரகடனப்படுத்திய ஒரே அமைச்சர் பாண்டியராஜன். இது மிகவும் பெருமையாக உள்ளது. இதற்கு முன் எத்தனையோ பேர் தமிழ் துறை அமைச்சர்களாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் நுட்பங்களை அதில் இருக்கும் ஷரத்துக்களை தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்" என்றார்.
மேலும்,
"இங்கு இருக்கும் ஆசிரியர்கள் அவரை புள்ளி விவர புலி என்று தெரிவித்தனர். அப்போது அவர் (பாண்டியராஜன்) ஏற்கனவே வைகைச்செல்வன் எனக்கு புள்ளிராஜா என்று பட்டம் வைத்திருக்கிறார் என்று தெரிவித்தார். அதனால், புள்ளி விவரங்கள் சொல்வதில் அவர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்" என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.