ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாவதையொட்டி, தூத்துக்குடி மாநகர், புறநகர் பகுதிகள், சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம், கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை வெளியாகிறது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செயல்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து கலவரத் தடுப்பு வாகனங்கள், சாலைகளில் வைக்கப்படும் பேரிகார்டுகள் ஆகியவை கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் போலீஸார் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
வெளிமாவட்ட போலீஸார் அனைவரும் பல்வேறு திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.