கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு பிடியாணை பிறப்பித்து உதகை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சயன், மனோஜ், சதீஷன், பிஜின், தீபு, உதயகுமார், மனோஜ்சாமி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இவர்களைத் தொடர்ந்து பிஜின் மற்றும் தீபு ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக 4 பேருக்கு மாவட்ட நீதிபதி வடமலை பிடியாணை பிறப்பித்தார்.
இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிஜின் மற்றும் தீபு ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை உதகை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு, நீதிபதி வடமலை பிடியாணை பிறப்பித்து வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.