டி.டி.வி. தினகரனுக்கு எதிரான ஃபெரா வழக்கு: விசாரணைக்கு உச்சநீதிமன்றம்  இடைக்கால தடை

டி.வி. தினகரனுக்கு எதிரான ஃபெரா வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
டி.டி.வி. தினகரனுக்கு எதிரான ஃபெரா வழக்கு: விசாரணைக்கு உச்சநீதிமன்றம்  இடைக்கால தடை


டி.வி. தினகரனுக்கு எதிரான ஃபெரா வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்ளே வங்கி மூலம் 1 கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ததாகவும், ஐரோப்பிய நாடுகளில் ஹோட்டல் தொடங்குவதற்காக 36.36 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்ததாகவும் டி.டி.வி. தினகரன் எம்எல்ஏ மீது அமலாக்கத் துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த இரண்டு வழக்குகளும் எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இவற்றில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தினகரன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. அமலாக்கப் பிரிவு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் முடிவடைந்தது.
இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி, இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக தினகரன் தரப்பில் கோரப்படும் அனைத்து ஆவணங்களையும் எழும்பூர் நீதிமன்றம் தினகரனுக்கு வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கின் விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். 
இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் சாரதா தேஷ்முக்கும், தினகரன் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வியும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர்மனுதாரரான டி.டி.வி. தினகரன் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை, எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது எனத்தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com