சென்னை: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் அதே நேரத்தில், கோடை வெப்பமும் தொடங்கிவிட்டது.
பிப்ரவரி மூன்றாவது வாரத்திலேயே தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் இன்று முதல் முறையாக வெயில் சதம் அடித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் கரூர், நாமக்கல், கோவை, தருமபுரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று கடுமையான வெப்பம் பதிவானது. இன்றும் அதே நிலை நீடிக்கும்.
கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை விட, தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்கள் அதிக வெப்பத்தை உணர்வது ஏன்?
கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து உள் மாவட்டங்களுக்கு வரும் அனல் காற்றினால், உள் மாவட்டங்களின் தரைப்பகுதி விரைவாக சூடாகிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களை விட, உள் மாவட்டங்கள் மதிய வேளையில் அதிக வெப்பத்தை உணர்கின்றன. இதனால்தான் தமிழகத்திலேயே உள்மாவட்டங்களான கோவை, நாமக்கல், தருமபுரி, கரூர், திருச்சி, சேலம், மதுரை மாவட்டங்களில் நேற்று அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
அதே சமயம், தமிழகத்தில் அரக்கோணம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்து பூமியைக் குளிர்வித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.