பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தில் இருந்து தனியார் வாகனத்தில் ஏற்றி வந்த வெடி பொருள்கள் வெடித்ததில், வெடி பொருள்களை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மதுசூதனபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகாயம், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் கிராமத்தைச் சேர்ந்த ஜெபனேஷ் ஆகியோர் இருவேறு சம்பவங்களில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
இதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமங்கலம், நயினாகரம் கிராமங்களைச் சேர்ந்த கரண், கோபி ஆகியோர் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.