தங்கத்தின் விலை திங்கள்கிழமை மீண்டும் உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. ஆபரணத்தங்கம் ஒரு பவுனுக்கு ரூ. 48 உயர்ந்து ரூ.25,568-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை நிகழாண்டில் ஜனவரி 28-ஆம் தேதி, ஒரு பவுன்தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது.
அதன்பிறகு, கடந்த 15-ஆம் தேதி பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.25,384-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகும் விலை குறையாமல் தொடர்ந்து
உயர்ந்தது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை மீண்டும் உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.25,568 ஆக இருந்தது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.6 உயர்ந்து, ரூ.3,196-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.43.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.43,600 ஆகவும் இருந்தது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது:
அமெரிக்காவில் நிதிப் பற்றாக்குறை, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் தங்கத்தின் விலை உயர்கிறது. இந்த மாதம் முழுவதும் தங்கம் விலையில் ஏற்றமும்,
இறக்கமும் காணப்படும். ஒரு பவுன் தங்கம் ரூ.25,568 என்பது தங்க விலை வரலாற்றிலேயே அதிகபட்ச விலையாகும் என்றார் அவர்.
திங்கள்கிழமை விலை
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,196
1 பவுன் தங்கம் 25,568
1 கிராம் வெள்ளி 43.60
1 கிலோ வெள்ளி 43,600