பிரதமர் மோடியின் உத்தரவுக்கேற்ப புதுவையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி செயல்படுகிறார் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினார்.
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை எதிரே 6-ஆவது நாளாக தர்னா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் வே.நாராயணசாமியைச் சந்தித்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி, புதுவை ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் ஒரே பிரச்னையை சந்திக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை ஆள வேண்டும்; அதுவே அரசியலமைப்பின் அடிப்படை சாசனம். ஆனால், துணை நிலை ஆளுநர்களால் ஆளும் சட்டவிரோத நிலை இருந்து வருகிறது.
யூனியன் பிரதேச அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்த பிறகும், புதுவை, தில்லி அரசுகளின் அன்றாட நடவடிக்கைகளில் இரு ஆளுநர்களும் தலையிட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். சர்வாதிகாரி போல கிரண் பேடி செயல்படுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரை அவமானப்படுத்துவது மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம்.
மத்தியில் காங்கிரஸ் அரசு வந்தாலும் புதுவை, தில்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம். இங்குள்ள முதல்வர்கள் முழு அதிகாரத்துடன் இருக்க வேண்டும். மக்களுக்காகவும், அவர்கள் உரிமைக்காகவும்தான் போராடுகிறோம் என்றார் அரவிந்த் கேஜரிவால்.