வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இந்தியக் கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர், இந்திய கடலோரக் காவல்  படையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இந்தியக் கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர், இந்திய கடலோரக் காவல்  படையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோரக் காவல் படை தின விழாவையொட்டி, சென்னையிலிருந்து காரைக்கால் வந்திருந்த ஐ.சி.ஜி.எஸ். செளரியா என்ற கப்பல், சென்னைக்குத் திரும்பும் முன்பாக  நாகை கடலோரப் பகுதி ரோந்துப் பணிக்கு அனுப்பப்பட்டது. 
இந்தக் கப்பல், திங்கள்கிழமை காலை நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகள், எல்லைத் தாண்டி இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வேதாரண்யம் -  கோடியக்கரை கடற்பரப்பில் வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 5 மீன்பிடி படகுகளை இந்திய கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்து சிறைபிடித்தனர். இந்தப் படகுகளில் சூரை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 25 மீனவர்களையும் கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி படகுகளுடன், ஐ.சி.ஜி.எஸ் செளரியா கப்பல் செவ்வாய்க்கிழமை (பிப்.19) காலை காரைக்கால் துறைமுகம் வந்தடையும் எனத் தெரிகிறது. எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்கள் மீது, இந்திய கடவுச் சீட்டு சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், அவர்கள்  நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் கடலோரக் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com