அதிமுக-பாஜக கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுவுடன் கூட்டணியில் இணைவது நேற்று உறுதியானது. அதன்படி, பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணி குறித்து கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அதிமுக-பாஜக கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம். மு.க.ஸ்டாலினுக்கு ஒரு தலைவர் போல பேசத் தெரியவில்லை. விரக்தியில் பேசி வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணி என்பது கட்டாயக் கல்யாணம் எனக்கூறும் திருநாவுக்கரசர் என்ன புரோகிதரா?.
புரோகிதர் பதவி கூட இல்லாமல் திருநாவுக்கரசர் தற்போது அம்போ என்று நிற்கிறார். இதுவரை எதிர்க்கட்சியாக இருந்தோம். தற்போது பாஜகவுடன் நட்பு கூட்டணி உருவாகியுள்ளது. நட்பு கூட்டணியால் இனி தமிழகத்திற்காக ரூ.20 ஆயிரம் கோடி மட்டுமல்ல, ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.