கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜை வரும் 25-ஆம் தேதி வரை போலீஸார் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கொடநாடு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆவணப் படத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சயன், மனோஜ் ஆகியோருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சயன், மனோஜ் ஆகிய இருவருக்கும் உதகை நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சயன், மனோஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை சயன் மற்றும் மனோஜ் மீறி செயல்பட்டுள்ளனர். தமிழக முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆவணப் படத்தில் பேட்டி கொடுத்துள்ளனர். மேலும் வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில் அதுதொடர்பாக பொது வெளியில் பேசுவது என்பது நீதித் துறையின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வது போன்றதாகும். மேலும் இவர்கள் இருவரும் சாட்சிகளை மிரட்டி, ஆதாரங்களை கலைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே தான் இவர்களது ஜாமீனை உதகை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக போலீஸார் தரப்பில் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடக்கூடாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.