சட்டப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களின் கல்வித்தகுதி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் டி.சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி, 32 பேராசிரியர்களை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.எஸ்.சாஸ்திரி உள்ளிட்ட 33 பேர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரான மனுதாரர், தனக்கு மீண்டும் அந்த பதவியை வழங்க வேண்டும் என கோரி பிரதான வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் தனிநீதிபதி தன் அதிகாரத்தை விரிவுபடுத்தி துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களின் கல்வித் தகுதியைக் கேட்டு, உத்தரவிட முடியாது. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறி உத்தரவிட்டனர்.