நெல்லூரிலிருந்து சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் மற்றும் ரூ. 4.20 கோடி செலவிலான புதிய ரயில்வே திட்டங்களை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலி காட்சி மூலம் நெல்லூரிலிருந்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
நெல்லூரிலிருந்து சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி நெல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகித்தார். அப்போது நடைமேடையில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்த ரயிலை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ரூ. 4.20 கோடியிலான ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது புதிய திட்டங்கள், பயணிகள் ரயில் குறித்து ரயில்வே அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
புதிதாகக் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் நெல்லூரிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். 66056 என்ற எண் கொண்ட இந்த ரயில் வேதபாளையம், வெங்கடாசெல்லம், கூடூர், நாயுடுபேட்டை, சூலூர்பேட்டை, தடா, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல் 66055 என்ற எண்ணில் இதே ரயில் பிற்பகல் 4.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு நெல்லூர் சென்றடையும். நெல்லூர் பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் வேலைக்கு வருவோருக்கு இப்புதிய ரயில் பயனுடையதாக இருக்கும்.
கும்மிடிப்பூண்டியில் சுரங்கப்பாதை: நாடு முழுவதும் ஆளில்லா லெவல் கிராசிங்கை படிப்படியாக ஒழிக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கும்மிடிபூண்டியில் ரூ.2.13 கோடி செலவில் புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூரில் பயணச்சீட்டு முன்பதிவு மையம்: திருவொற்றியூரில் தற்போது மூன்று கவுன்ட்டர்களுடன் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது ரூ. 40 லட்சம் செலவில் நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய பயணச்சீட்டு முன்பதிவு மையத்திற்காக இரண்டு அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஐந்து கவுன்ட்டர்கள் தரைத் தளத்திலும், மூன்று கவுன்டர்கள் முதல் தளத்திலும் முன்பதிவு மையம் செயல்பட உள்ளது.
மேலும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் வகையில் ரூ. 1.42 கோடி செலவில் நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வியாழக்கிழமை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருவொற்றியூரில் விழா: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ரயில்வே திட்டங்களை நெல்லூரிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த நிலையில் இதற்கான விழா திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பி. பென்ஜமின், மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் வேணுகோபால் (திருவள்ளூர்), டி.ஜி.வெங்கடேஷ்பாபு (வடசென்னை), மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிபூண்டி), தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.