பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக தேசிய தலைவர் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மதுரை வந்தடைந்தார்.
பாஜக சார்பில் நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் இன்று நடைபெறுகிறது. இதற்காக தனியார் இடத்தில் பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தடைந்தார். அவரை, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக தளத்தில் இறங்குகிறார். அதைத்தொடர்ந்து அமித் ஷா காரில் கூட்டம் நடைபெறும் மேடைக்கு வருகிறார்.
இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலர் முரளிதரராவ், தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பிருந்து, இசிஆர் சாலை வரை பாஜக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாநிலத் துணைத் தலைவர் குப்புராம், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளிதரன், செயலர் ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.