சென்னை: திமுக சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநில கட்சிகளுடனான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளையும், போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் விரும்பும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளை தேசிய கட்சிகள் தொடங்கி நடத்தி வருகின்றன. சில மாநிலங்களில் கூட்டணிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வரும் 25 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும். போட்டியிட விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1 முதல் மார்ச் 7 ஆம் தேதிக்குள் தலைமை கழகத்தில் சேர்க்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், 21 பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெற்று மேற்சொன்ன காலகட்டத்திலே தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.