மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க வீரசபதம் ஏற்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தை ஒட்டி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
துரோகத்திற்கு எதிராக நாம் முன்னெடுத்துள்ள புனிதப் போரின் நியாயத்தை உணர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 95 சதவீதத்துக்கும் மேலான உண்மைத் தொண்டர்கள் நம்முடன் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் ஆசி நமக்கு என்றும் உண்டு. மத்திய அரசின் பல்வேறு தமிழக விரோத திட்டங்களை அவர் அனுமதிக்க மறுத்தார். அவர் எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இன்று சுதந்திரமாக நுழைந்து தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. நம் ஆயுள் வரை நமது பயணமும் நம் நோக்கமும் தமிழகத்தைக் காத்து நிற்பதுதான். மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைகளை வாழவைப்பதுதான்.
நயவஞ்சகம் கொண்டோருக்கும், துரோகம் புரிந்தோருக்கும், தீய சக்திகளுக்கும் நாம் முடிவுரை தீட்டிடுவோம். மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைகளையும் கண்ட கனவுகளையும் நிறைவேற்றிட வீர சபதம் ஏற்போம்.