கூடலூரை அடுத்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் திடீரென ஏற்பட்ட பலத்த காட்டுத் தீயால் தமிழக-கர்நாடக எல்லை சனிக்கிழமை மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயால் பல நூறு ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலாகின.
தீயை அணைக்க கர்நாடக வனத் துறையினர் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனுப்பி தீயைக் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காட்டுத் தீயின் காரணமாக இரு மாநில எல்லைப் பகுதி புகை மண்டலமாக மாறியது. கூடலூர்-பெங்களூரூ சாலையோரம் காட்டுத் தீ பரவியதால் கர்நாடக வனத் துறையினர் உடனே கக்கநல்லாவிலுள்ள இரு மாநில எல்லையை மூடி போக்குவரத்தை தடை செய்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.